குடிபோதையில் வீட்டை கொளுத்திய கயவன்.. காவலர்களையும் எரித்துக்கொல்ல முயன்ற பயங்கரம்.!
குடிபோதையில் வீட்டை கொளுத்திய கயவன்.. காவலர்களையும் எரித்துக்கொல்ல முயன்ற பயங்கரம்.!
பெற்றோரை வீட்டில் இருந்து விரட்டி, குடியிருந்த வீட்டிற்கு தீ வைத்து கொளுத்திய குடிகாரன், கைது செய்ய வந்த காவல் அதிகாரிகளுக்கும் தீ வைத்த பயங்கரம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூர் மாவட்டம், ஜம்புகாடு கிராமத்தில் வசித்து வருபவர் தேவராஜ் (வயது 25). இவர் மதுபானம் அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்த நிலையில், தினமும் அதிகளவு மதுகுடித்துவிட்டு பெற்றோருடன் சண்டையிடுவது வழக்கம்.
இந்நிலையில், நேற்றும் அதிகளவு மதுபானம் அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த தேவராஜ், பெற்றோரிடம் கூடுதலாக மதுபானம் அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பெற்றோர் பணம் கொடுக்க மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த தேவராஜ் தகராறு செய்துள்ளார்.
மேலும், பெற்றோரை வீட்டில் இருந்து வெளியே துரத்திவிட்டு, குடியிருந்த குடிசை வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் குடிசை தீப்பிடித்து எரியவே, அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தாலும், வீடு முழுவதும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. காவல் துறையினர் ரகு மற்றும் திருமூர்த்தி ஆகியோர் தேவராஜை கைது செய்ய முயற்சிக்கவே, குடிகாரன் அதிகாரிகள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளான்.
இதனால் இரண்டு காவல் துறையினரும் தீக்காயம் அடைய, அவர்களை துரிதமாக செயல்பட்டு மீட்ட தீயணைப்பு படையினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, நடந்த சம்பவத்தை பார்த்து ஆவேசமடைந்த பொதுமக்கள், தேவராஜை கம்பத்தில் கட்டி வைத்து நொறுக்கியெடுத்தனர்.
பின்னர், காவல் துறையினரிடம் தேவராஜை ஒப்படைக்கவே, அவரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.