2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் பாண்டிச்சேரி உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 பாராளுமன்ற தொகுதிகளில் நாளை நடைபெற இருக்கிறது. நேற்றோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் தேர்தலில் வாக்களித்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலமாக வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன் மூலம் அவர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற உதவுவதோடு வாக்களிக்க வரிசையில் நின்று கஷ்டப்படாமல் இருக்கலாம்.
கர்நாடக மாநிலத்தில் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 26 மற்றும் மே 7ஆகிய தேதியில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த யசோதா என்ற 83 வயது பெண் இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாரிகளின் முன்பு தபால் மூலம் வாக்கு செலுத்தினார். பின்னர் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இறக்கும் தருவாயிலும் தேசத்தின் நலனுக்காக வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மூதாட்டியின் இறப்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.