பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; அமமுக டிடிவி தினகரன் கண்டனம்.!
பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; அமமுக டிடிவி தினகரன் கண்டனம்.!

யாருக்கும் பாதுகாப்பற்ற சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது. அரசு போதைப்பொருட்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி, திருமால்பூர் பகுதியில், விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து இருந்த பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் உள்ளூர் நபர்கள் மீது, அதே பகுதியில் வசித்து வரும் குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். பாமக தரப்பு தகவல்கள் விசிகவினர் கஞ்சா போதையில் இவ்வாறான செயலை செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து, அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக அரசின் அலட்சியம்
இந்நிலையில், பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான தினகரனின் அறிக்கையில், "ராணிப்பேட்டை அருகே விளையாட்டுத் திடலில் அமர்ந்திருந்த பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - பொதுமக்கள் தொடங்கி அரசியல் கட்சியினர் வரை யாருக்குமே பாதுகாப்பற்ற சூழலை தொடர்ந்து உருவாக்கி வரும் திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
இதையும் படிங்க: #JustIN: திமுக போராட்டத்திற்கு அனுமதி எப்படி கொடுக்கப்பட்டது? - நீதிமன்றத்தில் பாமக முறையீடு.!
யாருக்கும் பாதுகாப்பு இல்லை
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் விளையாட்டு மைதானத்தில் அமர்ந்திருந்த பாட்டாளி கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பெட்ரோல் குண்டு வீசியதில் இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சாமானிய மக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சியினர் என யாருக்குமே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை பலமுறை சுட்டிக்காட்டியும், அதனை தடுக்க ஆக்கப்பூர்வமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், தற்போது பட்டப்பகலில் பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு அசாதாரண சூழல் உருவாகியுள்ளது.
போதைப்பொருள் புழங்குகிறது:
தமிழகத்தில் நாள்தோறும் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களின் வரிசையில் அண்மைக்காலமாக பெட்ரோல் குண்டு வீச்சும் இணைந்திருப்பதற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப் புழக்கமே முக்கிய காரணம் என பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
தமிழக அரசுக்கு வலியுறுத்தல்
எனவே, பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்க்ளாக இருந்தாலும், அவர்கள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டனை பெற்றுத்தருவதோடு, இதுபோன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு அடிப்படைக் காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீங்கள் கொடுக்குற ரூ.1000 யாருக்கு வேணும்.. இதுதான் எங்களுக்கு வேண்டும்? - சௌமியா அன்புமணி ஆவேசம்., கைது.!