அப்பாவி தொழிலாளியை திருடன் என்று நினைத்து... அடித்து கொலை செய்த விசைத்தறி உரிமையாளர்...!!
அப்பாவி தொழிலாளியை திருடன் என்று நினைத்து... அடித்து கொலை செய்த விசைத்தறி உரிமையாளர்...!!
புத்தாண்டு தினமான நேற்று திருப்பூரில் திருடன் என நினைத்து கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூரில் திருடன் என நினைத்து கட்டிட தொழிலாளியை அடித்து கொலை செய்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக விசைத்தறி உரிமையாளர் உட்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை தரப்பில் இவ்வாறு கூறினர்,
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துச்செல்வம் (35). இவருடைய மனைவி விஜயசாந்தி (32). இவர்களுக்கு கோகுல்குரு (8), ஜெயபிரதாப் (6) என இரு மகன்கள் உள்ளனர். முத்துச்செல்வம் கடந்த 1½ வருடமாக திருப்பூர் மங்கலத்தை அடுத்த கோம்பக்காட்டுப்புதூரில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் அறையில் இருந்து வெளியே சென்ற முத்துச்செல்வம் நீண்டநேரமாகியும் அறைக்கு திரும்பவில்லை. இதை தொடர்ந்து காலை 6 மணியளவில் விருதுநகரில் இருக்கும் முத்துசெல்வத்தின் மனைவி விஜயசாந்தியை, முத்துச்செல்வத்தின் செல்போனில் இருந்து தொடர்பு கொண்டவர்கள், உங்கள் கணவர் அதிகாலை நேரத்தில் சுற்றித்திரிந்ததால் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம் என தகவல் தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து அறையில் இருக்கும் முத்துச்செல்வத்தின் நண்பர்களுக்கும் இ்ந்த தகவலை தெரிவித்துள்ளனர். உடனே அறையில் தங்கி இருந்த முத்துச்செல்வத்தின் நண்பர்கள் அவரை தேடி சென்றனர். அப்போது அங்குள்ள தனியார் விசைத்தறி கூடம் அருகில் முத்துச்செல்வம் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இது குறித்த தகவல் மங்கலம் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதைதொடந்து முத்துச்செல்வத்தின் நண்பர்களும், காவல்துறையினரும் அவரை மீட்டு சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முத்துச்செல்வத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து முத்துச்செல்வம் உடலை உடற்கூராய்விற்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் முத்துச்செல்வம் ரத்த வெள்ளத்தில் கிடந்த விசைத்தறி கூடம் இருந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர், விசாரணையில் முத்துச்செல்வம் அதிகாலை நேரத்தில் முத்துச்செல்வம் விசைத்தறி கூடம் அருகே நடந்து சென்றுள்ளார், அவரை திருடன் என சந்தேகித்து தொழிற்சாலை உரிமையாளர் முத்துச்செல்வத்தை தாக்கியுள்ளார். அதனால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து முத்துச்செல்வத்தின் சாவுக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்துச்செல்வத்தின் நண்பர்கள் தனியார் விசைத்தறி கூடம் முன்பு போராட்டம் செய்தனர். இதையடுத்து போராட்டத்தில் செய்தவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கொலையாளி விரைவில் கைது செய்துவிடுவோம் என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து கோம்பக்காட்டூர்புதூர் பகுதியை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் துரைபழனிசாமி (45), அதே பகுதியை சேர்ந்த சவுந்தரராஜன் (48) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், முத்துச்செல்வம் நேற்று அதிகாலை 4 மணிக்கு விசைத்தறி உரிமையாளர் துரைபழனிசாமி வீட்டின் கதவை தட்டினார் எனவும், இதனால் முத்துச்செல்வத்தை திருடன் என நினைத்து துரத்தி சென்றபோது அவர், சவுந்தரராஜன் வீட்டின் சுற்றுச்சுவர் ஏறி குதித்ததால், சவுந்தரராஜனும், துரைபழனிசாமியும் சேர்ந்து முத்துச்செல்வத்தை கட்டையால் தாக்கியுள்ளனர். அவர் மயங்கி விழுந்ததால் அங்கிருந்து வந்து விட்டதாக கூறியுள்ளனர். அதன் பின்னர் துரைபழனிசாமி மற்றும் சவுந்தரராஜன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.