#Breaking: எங்கே செல்கிறது சட்டம் ஒழுங்கு? திருப்பூரில் கணவன் கண்முன் பலாத்காரம்.. அன்புமணி ஆவேசம்.!



Anbumani On Tiruppur Girl Sexual Abuse Case 19 Feb 2025 

 

தினமும் தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் ஏதாவது ஒரு பெண்  மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள் என அன்புமணி ஆதங்கம் தெரிவிக்கிறார். 

திருப்பூர் மாவட்டத்தில் வேலைக்கு வந்த இளம்பெண், தனது கணவர் மற்றும் குழந்தைகள் கண்முன் 3 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்த புகாரின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: #Breaking: கணவன் கண்முன் மனைவி கத்திமுனையில் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்.!

இதுதொடர்பாக அவரின் ட்விட் பதிவில், கணவன், குழந்தை கண் எதிரில், கத்தி முனையில் இளம்பெண்  கூட்டுப் பாலியல் வன்கொடுமைதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே செல்கிறது?

திருப்பூரில் சொந்த ஊருக்கு  திரும்புவதற்காக காத்திருந்த இளம் பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் குழந்தை கண் எதிரில், மூன்று பேர் கொண்ட கும்பலால் கத்தி முனையில் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக  வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. 

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு

கோவையில் 17 வயது சிறுமியை கல்லூரி மாணவர்கள் 7 பேர்  கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியும்,  பதற்றமும் விலகுவதற்கு முன்பாகவே  திருப்பூரில்  இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது என்பதையே காட்டுகிறது.

Tiruppur

தமிழ்நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகாத நாட்களே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும், தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் ஏதாவது ஒரு பெண்  மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். இதைத்  தடுத்து நிறுத்த  வேண்டிய தமிழக அரசும், காவல்துறையும் இந்தக் கொடுமைகளை கைகட்டி  வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

ஆட்சியாளர்கள் உணரப்போவது எப்போது?

பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது குறித்து குற்றச்சாட்டுகள் எழும் போதெல்லாம் குற்றவாளிகளை கைது செய்து விட்டதாகக் கூறி அரசும், காவல்துறையும்  மார்தட்டிக் கொள்கின்றன. பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடமாடுவதை உறுதி செய்ய வேண்டியது தான் அரசு மற்றும் காவல்துறையின் பணி  என்பதையும், குற்றம் செய்தவர்களை கைது செய்வது என்பது இழைக்கப்பட்ட கொடுமைக்கு தேடப்படும் பரிகாரம் தானே தவிர அதில் பெருமைப்பட்டுக் கொள்வதற்கு எதுவும் இல்லை என்பதையும் திராவிட மாடல் ஆட்சியாளர்கள் எப்போது உணர்வார்கள்? என்பது தான் தெரியவில்லை.

திருப்பூரில் இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை  செய்தவர்கள் பிகாரைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. வெளி மாநிலத்தவர் அதிகம் பணி செய்யும் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறும் நிலையில், வெளி மாநிலத்தவரை கண்காணிக்கவும்,  சுற்றுக்காவலை வலுப்படுத்தவும் காவல்துறையும், அரசும்  நடவடிக்கை  எடுத்திருந்தால்  இந்தக் கொடுமை நடந்திருக்காது.

தமிழக அரசு இனியும் இல்லாத சட்டம் - ஒழுங்கை இருப்பதாக வீண் பெருமை பேசாமல் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும், பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும்  நடமாடுவதை உறுதி செய்யவும்  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருப்பூர்: 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; கணித ஆசிரியர் போக்ஸோவில் கைது.!