கோவை: காதலிக்க சொல்லி தொல்லை.. கல்லூரி மாணவியின் தம்பியை கடத்தி எக்சேஞ் டீலிங்.. இளைஞர்கள் கைது..!



in Coimbatore College Student Kidnapped Over Love Dispute 

காதல் விஷயத்தில் தொல்லை கொடுத்த நண்பன் குறித்து தம்பியிடம் தெரிவித்த அக்கா, இறுதியில் தம்பிக்காக உயிரை பணயம் வைக்கத் துணிந்த சம்பவம் நடந்துள்ளது. அதேநேரத்தில், இரண்டு நெஞ்சமும் பூத்து வரவேண்டிய கைகளை, ஒருபக்கம் பூத்துவிட்டது என மிரட்டிப்பார்த்த இளைஞர், கடத்தலில் ஈடுபட்டு வழக்குக்கு பயந்து தலைமறைவான சம்பவம் நடந்துள்ளது.

கோவையில் வசித்து வரும் 20 வயது கல்லூரி மாணவி, தோழியின் மூலமாக, அதே மாவட்டத்தில் வசித்து வரும் சூர்யா என்ற 22 வயதுடைய இளைஞரின் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பேசி வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக மாணவியை சூர்யா தொடர்பு கொண்டுள்ளார். 

அப்போது பேசிய சூர்யா, "நான் உன்னை காதலிக்கிறேன். திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன்" என கூறியுள்ளார். காதலில் விருப்பம் இல்லாத மாணவி, அதனை தெரிவித்து இருக்கிறார். மேலும், சூர்யாவின் அலைபேசி எண்ணையும் பிளாக் செய்துள்ளார். 

இதையும் படிங்க: கோவை எஸ்டிபிஐ கட்சி நிர்வாகியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

காதல் தொல்லை

இதனிடையே, மார்ச் 14 அன்று மாணவி தோழியின் வருகைக்காக கல்லூரிக்கு அருகே காத்திருந்துள்ளார். அச்சமயம், அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த சூர்யா, மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவி, தனது தம்பியிடம் தகவலை தெரிவித்துள்ளார். 

Coimbatore

மாணவியின் தம்பி சில நபர்களை அழைத்து வந்து சூர்யாவிடம் எச்சரிக்கை பேசி அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே, சம்பவத்தன்று மாணவியின் தம்பி கல்லூரி செல்ல போத்தனூர் பகுதியில் காத்திருந்துள்ளார். அங்கு நண்பர்களுடன் காரில் வந்த சூர்யா, மாணவரை கடத்தி சென்றுள்ளார்.

மாணவியின் தம்பி கடத்தல்

பின் மாணவிக்கு தொடர்பு கொண்ட சூர்யா, நீ என்னை திருமணம் செய்யவில்லை என்றால், உனது தம்பியை கடத்திவிட்டேன். கொலை செய்திடுவேன் என மிரட்டி இருக்கிறார். இதனால் மாணவி மற்றும் மாணவியின் தம்பி நண்பர்கள் செட்டிபாளையம் வந்துள்ளனர். அங்கு மாணவியை சூர்யாவிடம் ஒப்படைத்து, தம்பியை பெற்றுச்செல்ல டீலிங் பேசப்பட்டுள்ளது.

பதறிப்போன மாணவி திடீரென கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் வந்துவிட்டனர். இதனால் சூர்யா மாணவியின் தம்பியை அப்படியே விட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளார். பின்னர் தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். மாணவி கொடுத்த புகாரின் பேரில் சூர்யாவின் நண்பர்கள் கலையரசன் (19), சங்கர் (21), திருமுருகன் (21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான சூர்யாவுக்கு வலைவீசப்பட்டுள்ளது.
 

இதையும் படிங்க: ரூ.300 இலஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு, 16 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் தீர்ப்பளித்த நீதிமன்றம்; சிறைவாசம்.!