டிக்-டாக் செயலியை தடை செய்வது தவறு - நடிகை கஸ்தூரி பரபரப்பு ட்வீட்!



Actress kasthuri about tik tok app

தமிழகத்தில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் மணிகண்டன் உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் டிக் டாக் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த செயலியில் ஆபாச காட்சிகள் அதிகரித்து வருவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். சிறார்கள், பள்ளி மாணவர்கள் என அனைத்து வயதினரும் இந்த செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் இதில் அதிகரிக்கும் ஆபாச சைகைகள், நடனங்கள், வசனங்கள் மூலம் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வந்தது.

tik tok

இந்நிலையில், சட்டமன்றத்தில் இன்று பேசிய சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி, பல்வேறு ஆபாச செயலுக்கும், சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும் என்பதால் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மணிகண்டன், புளுவேல் கேமை போன்று டிக் டாக் செயிலியும் தடைசெய்ய கோரி மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று அவர் உறுதியளித்தார்.

tik tok

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, "டக்-டாக் செயலியில் ஆபாச காட்சிகள் பதிவு செய்யப்படுவதற்கு செயலி காரணம் இல்லை; அதன் பயனாளர்கள் தான் காரணம். விருதுகளை பெற்று தரும் கேமராக்கள் தான் ஆபாச படங்களையும் படம்பிடிக்கிறது. அதற்காக கேமராக்களை தடைசெய்ய முடியுமா? அதுபோல தான் டிக்-டாக் செயலியும். ஆகையால் டிக்-டாக்கை தடை செய்வது தவறு" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.