கனவை நனவாக்கி, ஓய்வெடுக்க சென்றுவிட்டார்! தனது தந்தை குறித்து மிக உருக்கமாக நடிகர் விஜய் வசந்த் வெளியிட்ட பதிவு!



vijay-vasanth-tweet-about-his-father

பிரபல தொழிலதிபரும், கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்தகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு,  தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த நிலையில், இரு தினங்களுக்கு முன் உயிரிழந்தார்.  70 வயது நிறைந்த இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள்  பலரும் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து நேற்று அவரது உடல் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் வசந்தகுமாரின் மகனும், நடிகருமான விஜய் வசந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 அதில், 50 ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு 20 வயது இருக்கும்போது, கனவுகளை மட்டுமே சுமந்து கொண்டு எனது  அப்பா சென்னை வந்தார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கனவு நனவானதும் ஓய்வெடுக்க தனது கிராமத்துக்கு சென்றுவிட்டார். ஒரு முழுமையான மனிதனாகத் திரும்பிச் சென்றுள்ளார். உங்கள் அஞ்சலிகளுக்கும், இரங்கல்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.