#BigBreaking: கள்ளக்குறிச்சி விஷசாராய மரண விவகாரம்: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.5000/-, கல்விச்செலவு ஏற்பு - அதிமுக அறிவிப்பு.!



AIADMK Announce Relief Fund for students 

 

விஷச்சாராயம் அருந்தி பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்படும். அவர்களுக்கான கல்விச்செலவை அண்ணாவின் பெயரால் தொடங்கப்பட்ட அதிமுக கழகம் வழங்கும் என எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷத்தன்மை கொண்ட மெத்தனால் சாராயம் குடித்த 120 க்கும் மேற்பட்டோரில், 37 பேர் உயிரிழந்தனர். எஞ்சியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயம் குறித்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதியான 22 நபர்களும், சேலத்தில் அனுமதியான 9 பேரும் என மொத்தமாக 37 பேர் பலியாகி இருக்கின்றனர். 

இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் களமிறங்கும் தமிழக வெற்றிக்கழகம்? - புஸ்லி ஆனந்தின் அனல் பறக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

முதல் ஆளாக கள்ளக்குறிச்சி வந்த எடப்பாடி பழனிச்சாமி 

இந்த விவகாரத்தில் விஷச்சாராயம் விற்பனை செய்த சாராய வியாபாரி கோவிந்தன், அவரின் மனைவி ரேவதி, தாய் ஜோதி, தம்பி தாமோதரன் உட்பட மொத்தமாக 10 பேரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, காலையே கிளம்பி கள்ளக்குறிச்சி வந்தடைந்தார். 

எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அங்கு மருத்துவர்களிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தவர், சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்தித்து இரங்களும் தெரிவித்தார். கருணாபுரம் பகுதியில் மரண ஓலம் வீதியெங்கும் சடலத்தை கிடத்தி கண்கலங்க வைக்கும் வகையில் சோகம் நடந்துள்ளது. இந்த விஷயம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், ஆளுங்கட்சிக்கு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.

குழந்தைகளுக்கான செலவு ஏற்பு

மேலும், "விஷ சாராயத்தில் பெற்றோரை இழந்த குடும்பத்துக்கு, அதிமுக சார்பில் மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை உட்பட பிற உதவிகளும்  செய்யப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச்செலவை அதிமுக ஏற்கிறது" என தெரிவித்தார். பெற்றோரை இழந்த குழந்தைகளின் விபரம் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கான உதவிகளை அதிமுக செய்யும் என்றும் உறுதியளித்த எடப்பாடி பழனிச்சாமி, இந்த மரணங்களுக்கு அரசு பொறுப்பேற்று மு.க ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இந்த ஆய்வின்போது அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.