ஒரே மகனை சாலை விபத்தில் இழந்த அமைச்சர் செல்லூர் ராஜு! அவருக்குள் இப்படி ஒரு சோகமா!
இன்றைய சூழலில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து நெருக்கடி ஒருபுறமிருக்க விபத்துக்கள் நடப்பதும் பெருகிக்கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் தான் விபத்துகளானது அதிக எண்ணிக்கையில் நடைபெறுகிறது.
இந்நிலையில் மதுரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய ஒவ்வொரு இடத்திலும் மதுரை மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு படக்காட்சிகள் உள்ளடக்கிய நிகழ்வுகள் ஒவ்வொரு வாரமும் மதுரை மாநகர் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்த வாரம் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு தற்சமயம் பெருகிவரும் சாலை விபத்துகள் குறித்து பெரும் கவலை தெரிவித்தார். விபத்தில் பலியாவோர் ஒருபுறமிருக்க அவர்களால் அவரை சார்ந்துள்ள பெற்றோர்கள், உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் பெரும் கவலை அடைகின்றனர்.
மேலும், இதில் பாதிக்கப்பட்ட ஒருவனாக தானும் இருப்பதாக தெரிவித்தார். அப்போது, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனது ஒரே மகன் வாகன விபத்தில் பலியான சம்பவம் இன்றளவும் என்னை விட்டும் எனது மனைவியை விட்டும் நீங்காத பெரும் கவலையாக உள்ளது என்று தெரிவித்தார். எனவே அனைவரும் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் வாகனங்களை ஓட்டுமாறு அறிவுறுத்தினார்.