பாவிங்களா..! பிறந்து 3 நாள் ஆன பிஞ்சு குழந்தையை பைக்குள் போட்டு புளியமரக்கிளையில் தொங்கவிட்டு சென்ற அவலம்.



3-days-old-baby-cries-near-tamarind-tree-in-pudukottai

பிறந்து மூன்று நாட்கள் ஆன பெண் குழந்தை ஒன்று துணிக்கடை பையில் கட்டி புளியமரத்தில் தொங்க விடப்பட்டிருந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ளது இளங்குடி பட்டி.  இந்த பகுதியில் அமைந்துள்ள ஐயனார் கோவிலின் முன்பு உள்ள புளிய மரம் ஒன்றில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு உள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்தப் பக்கமாக சென்றவர்கள் மரத்தின் அருகே சென்று பார்த்தபோது அவர்களுக்கு மிகப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. 

பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று ஜவுளிக்கடை கட்டைப்பையில் வைத்து புளிய மரத்தில் கட்டி தொங்க விடப்பட்டு இருந்ததை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். 

பின்னர் இந்த சம்பவம் குறித்து அந்தப் பகுதி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

சிகிச்சை மற்றும் குழந்தையின் உடல்நலம் குறித்து குழந்தைகள் நல அமைப்பினர் தற்போது கவனித்து வருகின்றனர்.  இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குழந்தையை மரத்தில் கட்டி தொங்க விட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து மூன்று நாட்களே ஆன பிஞ்சு குழந்தை ஒன்று மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.