கட்டில் செய்யும் போது வயதான தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்: எந்திரம் பட்டதால் பரிதாப பலி..!



Tragedy befell an old carpenter while making a bed

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள ராமமலை ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி கணவாய் ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் (68). இவர் ஒரு தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி முனியம்மா (63). வரதராஜன் வீட்டில் இருந்தே சிறு சிறு தச்சு வேலைகளை செய்து வந்தார்.

இந்த நிலையில், வீட்டில் கட்டில் செய்வதற்கன வேலையை தொடங்க சிறிய மரம் அறுக்கும் எந்திரம் மூலம் மரத்தை அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த எந்திரம் வரதராஜன் வலது காலில் பட்டு காலை துண்டித்துள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் அலறிய வரதராஜனை காப்பாற்ற வந்த அவரது மனைவி முனியம்மாளுக்கும் காலில் பட்டு அவரும் வலது காலில் பலத்த காயமடைந்துள்ளார்.

தம்பதியினரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அதற்குள் காலில் ஏற்பட்ட பலத்த காயத்தால் ரத்த போக்கு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே வரதராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். ரத்த வெள்ளத்தில் துடித்த முனியம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கே.வி.குப்பம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.