ஆஸ்திரேலியாவில் தொடரும் இந்து கோயில்கள் மீதான தாக்குதல்...!!
காலிஸ்தான் ஆதரவாளர்கள், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள இந்து கோவில் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழர்கள், மூன்று நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடும் நிலையில், பக்தர்கள் தரிசனம் செய்ய வந்தபோது, கோவில் மீது தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு வாரத்திற்குள் நடந்த இரண்டாவது தாக்குதல் ஆகும். கேரம் டவுன்ஸ் நகரில் இருக்கும் சிவ விஷ்ணு கோவில் மீது நேற்று தாக்குதல் நடத்தியவர்கள், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதி இருப்பதாக ஆஸ்திரேலிய இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
இது குறித்து உஷா செந்தில்நாதன் என்பவர் கூறுகையில், நாங்கள் ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ் சிறுபான்மையினர். இது எங்களது வழிபாட்டுத் தலம். எந்தவித அச்சமும் இல்லாமல் காலிஸ்த்தான் ஆதரவாளர்கள் தங்கள் வெறுப்புச் செயல்களால் கோவிலை நாசப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
விக்டோரியாவில் இருக்கும் இந்து சமூகத்தினரை அச்சுறுத்த நினைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு விக்டோரியா மாநில முதல்வர் மற்றும் காவல்துறைக்கு வலியுறுத்தி இருக்கிறேன் என்றார். இதேபோல், கடந்த 12-ஆம் தேதி மெல்போர்ன் நகரில் சுவாமி நாராயண் என்ற இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி, இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதியது குறிப்பிடத்தக்கது.