#JustIN: 38 பேரின் உயிரை பறித்துக்கொண்ட கள்ளச்சாராயம்; அரசை கடுமையாக கண்டிக்கும் இயக்குனர் பா. ரஞ்சித்.!



Director Pa Ranjith Condemn to Govt about Kallakurichi Tragedy

தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே கள்ளக்குறிச்சி துயரத்திற்கு காரணம் என பா. ரஞ்சித் குற்றசாட்டை முன்வைத்து இருக்கிறார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியை சேர்ந்த நூற்றுக்குமேற்பட்டோர், அப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கிக்குடித்தனர். கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டதாக தெரியவரும் நிலையில், போதைக்காக கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 38 பேர் பலியாகி இருக்கின்றனர். மருத்துவமனையில் 82 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பா. ரஞ்சித் கண்டனம்

கள்ளக்குறிச்சியில் நடந்த கொடூர சம்பவத்திற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். பலரும் அடுத்தடுத்து கள்ளக்குறிச்சி விரைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர்களும் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு வருகின்றனர். இதனிடையே, இயக்குனர் பா. ரஞ்சித் தனது கண்டனத்தை அரசுக்கு எதிராக குவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: அரசு நிர்வாகத்தின் அலட்சியம்.! கள்ளக்குறிச்சி விவகாரம்.! நடிகர் விஜய் கண்டனம்!!

குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்குக

அவரின் ட்விட்டர் பதிவில், "கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக்கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அதற்கு வன்மையான கண்டனங்கள்! சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோரைக் கடுமையாகத் தண்டிப்பதோடு மட்டும் அல்லாமல், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! 

நோயாளியாக கருதி மறுவாழ்வு மையங்களை உருவாக்குக

மேலும், சமீப காலமாக தமிழ்நாட்டில் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வயது வித்தியாசமின்றி, நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் பெருமளவில் பெருகியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இதனால் அவர்களின் குடும்பங்களும் வாழ்வாதாரமும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை நோயாளிகளாகக் கருதி அவர்களின் நிலையை மாற்ற மாவட்ட ஒன்றியங்கள் தோறும், மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவோம்!" என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: எப்படியிருந்தவர் இப்படியாகிட்டாரே.. திருமணத்திற்கு பின் மனைவிக்காக பிரேம்ஜி செய்த காரியம்.! வைரல் வீடியோ!!