நடுரோட்டில் படுத்து உருண்ட பா.ஜ.க-வினர்: திடீர் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு..!



bjp-members-lying-down-in-the-middle-of-the-road

திண்டுக்கல் மாவட்டம், குடை பாறைப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் செந்தில் பால்ராஜ். இவர் பா.ஜனதா கட்சியின் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இன்று அவரது குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தெற்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் இதற்கிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலையில் உள்ள குடை பாறைப்பட்டி பிரிவில் 70க்கும் மேற்பட்ட பா.ஜனதா கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எந்றும் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த சிலர் சாலையில் படுத்து உருண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.