எதையாவது விட்டு வைங்க பாஸ்!!: மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜீத் பங்கேற்பு..!



actor-ajith-kumar-participation-in-state-level-shooting

திருச்சியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி மாநகரம் கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் இயங்கிவரும் ரைபிள் கிளப்பில் 47 வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி (பிஸ்டல் மற்றும் ரைபிள் பிரிவுகள்) கடந்த 25 ஆம் தொடங்கியது. இதில் இன்று நடைபெறும் போட்டியில் நடிகர் அஜீத் குமார் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த போட்டியில், தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுவதில் பயிற்சி பெற்ற சுமார் 1,300 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டிகள் சிறியவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என மூன்று வகையாக தரம் பிரிக்கப்பட்டு 16, 19, 21 ஆகிய வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கு தனியாகவும், 21 முதல் 45 வயது வரை உள்ள பிரிவினருக்கு தனியாகவும், மேலும் 45 முதல் 60 வயது மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ள பிரிவினருக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

பிஸ்டல் துப்பாக்கி சுடுவதற்கான போட்டியாளர்களுக்கு வரும் 28 ஆம் தேதி வரை போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுகிறது. 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை ரைபிள் வகை துப்பாக்கி சுடுபவர்களுக்கான போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இன்று நடைபெறும் 45 முதல் 60 வயதினருக்கு உட்பட்டோர் பிரிவில் நடிகர் அஜித் குமார் பங்கேற்க உள்ளார். இந்த போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளர்கள், அடுத்த கட்டமாக தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.