சம்பளம் கேட்ட செக்யூரிட்டியை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய பயங்கரம்.. கோவை கொடிசியா அருகே பகீர் சம்பவம்.!

மதுரை தெற்கு மாசி வீதியில் வசித்து வருபவர் ரத்தினவேல் (வயது 76). இவர் குடும்ப பிரச்சினையினால் மனைவியை பிரிந்து, கடந்த 4 வருடத்திற்கு முன்னதாக கோயம்புத்தூருக்கு வந்துள்ளார். அதனைத்தொடர்ந்து, அங்குள்ள இராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் எஸ்.எஸ். செக்யூரிட்டி நிறுவனத்தில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில மாதமாகவே இரத்தின வேலுக்கு நிறுவனம் ஊதியம் கொடுக்காத நிலையில், சம்பவத்தன்று தனக்கான ஊதியத்தை நிறுவன உரிமையாளர் திலிப் குமார், அதிகாரி ஜான் ஆகியோரிடம் கேட்டுள்ளார். அவர்கள் நவ இந்தியா அருகேயுள்ள கட்டிடத்திற்கு வருமாறு அழைக்க, இரத்தின வேலும் அங்கு சென்றுள்ளார்.
அப்போது, நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அதிகாரி வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்திவிட்டோம். ஏ.டி.எம்மில் பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறவே, அதிகாரிகள் கூறியது பொய் என்பதை புரிந்துகொண்ட இரத்தினவேல் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திலிப் குமார் மற்றும் ஜான் ஆகியோர், இரத்தினவேலை தாக்கி காரில் கொடிசியா பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு, இரத்தின வேலின் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தவே, அவர் உயிருக்கு போராடி அலறி துடித்துள்ளார். இதனைக்கண்டு ஆதரிச்சியடைந்த பொதுமக்கள் இரத்தின வேலை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பீளமேடு காவல் துறையினர், திலிப்குமார் மற்றும் ஜானை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.