நிறை மாத கர்ப்பிணியை கொடுமைபடுத்திய சைக்கோ கணவன்: பட்டினி போட்டு சிகரெட்டால் சுட்ட கொடூரம்..!



husband-who-was-suspicious-of-his-wifes-behavior-starve

மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் அவரை பட்டினி போட்டு சிகரெட்டால் சுட்டு கொடுமைபடுத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டை அருகேயுள்ள பவழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணிராஜ் (30). இவரது மனைவி சர்மிளா பானு (24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது சர்மிளா 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

தம்பதியினர் இருவரும் காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனைவியின் நடத்தை  மீது சந்தேகமடைந்த  மணிராஜ் அவரை கொடுமைப்படுத்தியதுடன் அவப்போது தாக்கி வந்துள்ளார். இதன் காரணமாக, கணவரிடம் கோபித்துக்கொண்டு  கடந்த 2 மாதத்திற்கு முன்பு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர் அவரை சமாதானப்படுத்திய மணிராஜ் அவரை கடந்த 15 நாட்களுக்கு முன்பு தன்னுடன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இதற்கிடையே மீண்டும், சர்மிளாபானுவுக்கு சாப்பாடு, தண்ணீர் எதுவும் கொடுக்காமல் கொடுமைப்படுத்தியதுடன் சிகரெட்டால் அவரது உடலில் பல்வேறு இடங்களில் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார்.

இதனால் காயமடைந்த சர்மிளா பானுவை மீட்ட அவரது உறவினர்கள் மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில், அவர் மேல் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு  உரிய சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், சர்மிளா பானு குறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல் ஆய்வாளர் ரேவதி மற்றும் காவலர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் இதுகுறித்து எழுத்துப்பூர்வமான புகாரை சர்மிளா பானுவிடம் பெற்ற காவல்துறையினர் மணிராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.